வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை..!

சிபிஐ(எம்)

சிபிஐ(எம்)

ஆய்வுகள் முடித்து 10 ஆண்டுகளாகியும் வீடுகள் தராததால் பி.ஆர்.நடராஜன் எம்.பி, தலைமையில் வட்டாட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்திற்கு சிபிஐஎம் அழைப்பு விடுத்திருந்தது,

கோவை உக்கடம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த நிலையில் அங்கிருந்த மக்களுக்கு வீடு வழங்குகிறோம் என வாக்குறுதியளித்து 10 ஆண்டுகள் கடந்தும் இதுவரை வீடுகளை ஒதுக்கித் தராததால் கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் தலைமையில் அப்பகுதி மக்கள் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி கோவை உக்கடம் வின்சென்ட் சாலையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 13 பேர் இறந்தனர். மேலும், 24 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அதே இடத்தில் வீடுகள் கட்டித்தர அரசு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு 352 குடும்பத்திற்கு மட்டும் வீடுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள கட்டிடத்தை சுற்றியிருந்த ஏழை, எளிய உழைப்பாளி மக்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்ததையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்திரவின் பேரில் பாதிக்கப்படும் குடும்பத்தினர் எத்தனை பேர், வீடுகள் தேவைப்படுபவர் எத்தனை பேர் உள்ளிட்டவைகளை தெற்கு வட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

இதன்பேரில் அறிக்கையையும் இறுதி செய்தனர். 2020ஆம் ஆண்டு அறிக்கையை அளித்த பிறகும், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இதுவரையிலும் எந்த பயனாளிகளுக்கும் வீடுகள் வழங்கப்படாததோடு, இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில், பாதிக்கப்பட்ட மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைக்கான தீர்வை அளிக்க வேண்டும் என்றனர்.

கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்த தெற்கு வட்டாட்சியர் இறுதி செய்யப்பட்ட அறிக்கையை ஓரிரு நாளில் கோட்டாட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்து உரிய தீர்வை பெற்றுத் தருவதாக திரண்டிருந்த மக்களிடம் உறுதியளித்தார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.