மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (2.11.2022) முகாம் அலுவலகத்தில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து,
மேற்கு வங்கத்தினுடைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பலமுறை சென்னைக்கு வந்திருக்கிறார். இன்னும் சிறப்போடு சொல்ல வேண்டும் என்று சொன்னால், கருணாநிதியினுடைய திருவுருவச் சிலையை முரசொலி அலுவலகத்திலே அவர் வந்து திறந்து வைத்தது, உள்ளபடியே எங்களை பெருமைப்படுத்தியது, கருணாநிதியை பெருமைப்படுத்தியது. திராவிட முன்னேற்றக் கழகத்தை, தமிழ்நாட்டை பெருமைப்படுத்தி இருக்கிறார்.
மேற்கு வங்கத்தின் பொறுப்பு கவர்னராக இருக்கக்கூடிய இல.கணேசனுடைய இல்லத்திலே நடைபெறக்கூடிய நிகழ்ச்சிக்கு வந்திருக்ககூடிய சூழ்நிலையில், என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்து மரியாதை நிமித்தம் என்னை சந்தித்து இருக்கிறார்.
அதேநேரத்தில், என்னை அவசியம் மேற்கு வங்கத்திற்கு, கொல்கத்தாவிற்கு என்னுடைய விருந்தினராக வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். அவரது அழைப்பை நானும் ஏற்றுக்கொண்டு இருக்கிறேன்.
கேள்வி – இந்த சந்திப்பின் மூலமா நாடாளுமன்ற தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிட்டதாக எடுத்துக்கலாமா?
ஸ்டாலின் : இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான், தேர்தல் சந்திப்பு அல்ல. தேர்தல் பற்றி பேசவில்லை, அரசியல் பற்றி பேசவில்லை. எனவே மரியாதை நிமித்தம்தான் அவர் இங்கே வந்திருக்கிறாரே தவிர வேறு எதற்காகவும் அல்ல. அதை அவரே சொல்வார்.