சென்னை மக்கள் அனைவரும் எதிர்பார்த்த 135 அடி உயர அண்ணாநகர் டவர் பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள “டவர் பூங்கா” மிகவும் பழமையான பூங்காக்களில் ஒன்று ஆகும். டவர் பூங்கா அமைக்கும் பணி 1960 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1968 ஆம் ஆண்டு இது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. சென்னை அண்ணாநகரின் முக்கிய அடையாளமாக இந்த “டவர் பூங்கா” இருந்து வருகிறது. இந்த டவர் பூங்கா கோபுரத்தின் மேலே பொதுமக்கள் ஏறிச்சென்று சென்னை மாநகரின் இயற்கை அழகை ரசித்து வந்தார்கள். சில காதலர்கள் மேலே இருந்து தற்கொலை செய்து கொள்ள, 2011 ஆம் ஆண்டு முதல் இந்த டவர் மேல் ஏற தடைவிதிக்கப்பட்டது.
மேலும், கடந்த 11 ஆண்டுகளாக பொதுமக்கள் கோபுரத்தின் மேலே செல்ல அனுமதிக்க மறுக்கப்பட்டது. இந்த நிலையில், பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கோபுரம் மற்றும் பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கோபுரம் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு வந்தது. கோபுரத்தின் பக்கவாட்டு பகுதிகள் அனைத்திலும் தடுப்பு கம்பிகள் மற்றும் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
கோபுரத்தின் தடுப்பு சுவர் மற்றும் தூண்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது. பூங்காவில் கோபுர பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் அடுத்த வாரம் இந்த கோபுரம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது. இது சென்னை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.