ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் பணிகள் காரணமாக திருச்சி – திருவனந்தபுரம் மற்றும் சென்னை – நாகர்கோவில் இடையேயான அந்தியோதயா ரயில்கள் பகுதி அளவுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள மேலப்பாளையம் – நாங்குநேரி ரயில் நிலையங்கள் இடையே இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ், 16ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை திருநெல்வேலி – நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி வரை மட்டுமே ரயில் இயக்கப்படும் எனவும், மறு மார்க்கத்தில் நாகர்கோவிலுக்குப் பதிலாக திருநெல்வேலியில் இருந்து புறப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல, திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வரும் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை திருநெல்வேலி – திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுவதால், திருச்சியில் புறப்படும் ரயில் திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும், மறு மார்க்கத்தில் திருவனந்தபுரத்திற்குப் பதிலாக திருநெல்வேலியில் இருந்து ரயில் புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.