தந்தையின் மரணம் பற்றி நடிகர் அஜீத்குமார் உருக்கம்!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். மறைந்த சுப்பிரமணியத்தின் உடல் இன்று சென்னை பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

சுப்பிரமணியம் கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சுமார் 3.15 மணியளவில் உடல்நலக் குறைவால் காலமானார். இது நடிகர் அஜீத் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜீத்தின் தந்தை காலமான செய்தி அறிந்த திரைத்துறையினர், அவர்களது உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் பலர் திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரடியாகச் சென்று மறைந்த சுப்பிரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தன் விடாமுயற்சியால் தன்னை புகழின் உச்சத்தில் நிலைநிறுத்திக் கொண்டவர் நடிகர் அஜீத்குமார். இவருக்கு திரையுலகிற்கு உள்ளேயும் வெளியேயும் ரசிகர்கள் ஏராளம். இந்த துயர நேரத்தில் பலர் தந்தையின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், ஆறுதல் சொல்லவும் எங்களை கைபேசி வாயிலாக தொடர்பு கொண்டவர்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை என நடிகர் அஜித் உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தந்தை இறுதி சடங்கு குடும்ப நிகழ்வாகவே இருக்க வேண்டும் என கருதுகிறோம். எனவே இறுதிச் சடங்கை தனிப்பட்ட முறையில் செய்ய ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்றேன் என தெரிவித்துள்ளார்.