உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளைப் பயன்படுத்த வேண்டாம் - உச்சநீதிமன்றம் முடிவு

தமிழ்நாடு, குஜராத், சத்தீஷ்கார், கொல்கத்தா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தங்களது மாநில மொழிகளை பயன்படுத்த அனுமதி கேட்டன. ஆனால் விவாதங்களுக்குப் பிறகு, அந்த முன்மொழிவுகளை ஏற்க வேண்டாம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துவிட்டது.

பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளைப் பயன்படுத்த வேண்டாம் என உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சையத் நசீர் உசேன், நீதிமன்ற விவகாரங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்துவது பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், நீதிமன்ற செயல்பாடுகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கவேண்டும் என்ற விதி உள்ளதாக கூறியிருந்தார்.

மேலும் வேறு மொழிகளை சேர்க்க வேண்டுமானால் உச்சநீதிமன்ற தலைமை நீதபதியின் அனுமதி வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் ஏற்கனவே இந்திக்கு மட்டும் அனுமதி இருக்கும் நிலையில், தமிழ்நாடு, குஜராத், சத்தீஷ்கார், கொல்கத்தா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தங்களது மாநில மொழிகளை பயன்படுத்த அனுமதி கேட்டன. இதற்கான முன்மொழிவுகளை இந்திய அரசு பெற்றது. இதுகுறித்து இந்திய தலைமை நீதிபதியிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. உரிய விவாதங்களுக்குப் பிறகு, அந்த முன்மொழிவுகளை ஏற்க வேண்டாம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துவிட்டது.

இதன்பிறகும் அதனை மறு ஆய்வு செய்யுமாறு தமிழ்நாடு அரசு மற்றொரு கோரிக்கையை முன்வைத்தது. இதற்கும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. முந்தைய முடிவுகளே மீண்டும் வலியுறுத்தப்பட்டது. சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கீழ், இந்திய பார் கவுன்சில், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் ‘பாரதிய பாஷா சமிதி’யை அமைத்துள்ளது. சட்டப்பூர்வ விஷயங்களை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் நோக்கத்துக்காக அனைத்து இந்திய மொழிகளுக்கும் நெருக்கமான, ஒரு பொதுவான சொற்களஞ்சியத்தை இந்த குழு உருவாக்குகிறது.

மேலும், சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்டமன்றத் துறையானது இந்தியில் 65,000 சொற்களைக் கொண்ட சட்டப்பூர்வ சொற்களஞ்சியத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கும், அதை பொது தளத்தில் தேடக்கூடிய வடிவத்தில் அனைவரும் பயன்படுத்துவதற்கும் தயார் செய்துள்ளது என அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.