மேஷத்தில் குரு வக்ரத்தால், எந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும்?

குருபகவான் மேஷ ராசியில் வக்ரமடைந்துள்ளார். டிசம்பர் மாதம் வரைக்கும் வக்ரநிலையில் பயணம் செய்யும் குருபகவான் எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் திருப்புமுனையும் ஏற்படப்போகிறது.
12 ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்:

குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் வக்ரமாக பயணம் செய்யும் இந்த காலத்தில் பண வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். விட்டுக்கொடுத்து செல்வது குடும்பத்தில் ஒற்றுமையை அதிகரிக்கும். ஊர் மாற்றம் இடமாற்றத்தினால் நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு குருபகவான் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடன் பிரச்சினைகள் உங்களுக்கு தொல்லையை கொடுக்கலாம். எச்சரிக்கை தேவை. எடுத்த காரியத்தை முடிக்க போராட வேண்டியிருக்கும். வேலையில் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பிணிகள் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை சாப்பிடாதீங்க. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமும் எச்சரிக்கையும் தேவை.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் வக்ர கதியில் பயணம் செய்யும் குரு பகவான் உங்களுக்கு லாபத்தை கொடுப்பார். உறவினர்கள் மூலம் மறைமுக நெருக்கடிகள் வரும். பண நெருக்கடி வந்து நீங்கும். வீண் செலவுகளை தவிர்த்து விடுங்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதரர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். குரு தட்சிணாமூர்த்தியை நினைத்து விரதம் இருங்க தடைகள் நீங்கும்.

கடகம்:

குரு பகவான் பத்தாம் வீட்டில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவு அதிகமாக இருக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த கடன்களை திருப்பி கொடுப்பீர்கள். தொலைந்து போன பணம், நகை ஆவணங்கள் திரும்ப கிடைக்கும். தடைபட்டு வந்த காரியங்கள் நிறைவேறும். கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் நலமாக இருக்கும்.

சிம்மம்:

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் வக்ர பெயர்ச்சியால் புது தெம்பும் உற்சாகமும் பிறக்கும். குரு பகவான் பார்வை உங்களுடைய ராசிக்கு கிடைப்பதால் புது வேலை கிடைக்கும். உயர்கல்வி படிப்பதில் இருந்த தடைகள் நீங்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் கொஞ்சம் கவனம் தேவை. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள். வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

கன்னி:

அஷ்டமத்து குரு வக்ர நிலையில் பயணம் செய்வதால் கவலை வேண்டாம் மன குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும். திருமணம் உள்ளிட்ட தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மளமளவென நடைபெறும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். நினைத்த காரியம் நிறைவேற விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது நல்லது.

துலாம்:

குரு பகவான் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் வக்ரநிலையில் சஞ்சரிக்கிறார். உங்களின் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் தடைகள் ஏற்படும். ஏழாம் வீட்டில் இருந்து குரு உங்கள் ராசியை பார்த்தாலும் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும். சிலருக்கு திடீர் பணவரவு வரும் என்றாலும் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெளியூர் பயணங்களை ஒத்திப்போடுங்கள். விஷ்ணு சகஸ்ராநாமம் படிங்க மனக்கவலைகள் நீங்கும்.

விருச்சிகம்:

குரு பகவான் ஆறாம் வீட்டில் வக்ர நிலையில் பயணம் செய்வதால் தடைபட்டு வந்த காரியங்கள் மளமளவென நிறைவடையும், சுப காரிய பேச்சுவார்த்தைகள் தடைகள் இன்றி நிறைவேறும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பேச்சில் நிதானம் அவசியம். அவசரப்பட்டு பேசிவிட்டு அப்புறம் அவதிப்படாதீர்கள். சிலருக்கு வீண் அலைச்சல்கள் வரலாம் கவனமாக இருங்க. உணவு விசயத்தில் கவனமாக இருங்க இல்லாவிட்டால் ஆரோக்கிய குறைபாடு வரும் இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

தனுசு:

குரு பகவான் வக்ர நிலையில் பயணம் செய்தாலும் குருவின் பார்வை உங்களின் ராசியின் மீது விழுகிறது. இனி தொட்டதெல்லாம் பொன்னாகும். உங்களின் அழகும் ஆரோக்கியமும் கூடும். உங்களுக்கு பண வருமானம் பல வழிகளிலும் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். சமூகத்தில் உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். தடைபட்டு தள்ளிப்போன சுப காரியங்களை நடத்துவீர்கள். உங்களின் நட்பு வட்டம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். வியாழக்கிழமை குருபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

மகரம்:

குரு பகவான் வக்ர நிலையில் பயணம் செய்தாலும் திடீர் திருப்புமுனைகளை ஏற்படுத்தப்போகிறது. ஏழரை சனியால் தடைபட்டிருந்த திருமணம் சுக ஸ்தான குரு பகவானால் கைகூடி வரும். வீட்டிலோ அலுவலகத்திலோ. எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசாதீர்கள் வளைந்து கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் இல்லாவிட்டால் மருத்துவ செலவு இழுத்து விட்டு விடும். வியாழக்கிழமை குருபகவானை நினைத்து விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லதே நடக்கும்.

கும்பம்:

குரு வக்ர பெயர்ச்சியால் உங்களுக்கு திடீர் செலவுகள் வரும். நல்ல வேலையும் சிலருக்கு புரமோசனும் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் செலவுகள் வரும். அரசு வழி விவகாரங்களில் பிரச்சினை வரலாம் அலட்சியமாக இருக்காதீர்கள். செப்டம்பர் முதல் டிசம்பர் வரைக்கும் உங்களுக்கு அற்புதமான காலகட்டம். உங்களுக்கு வருமானம் வரும். உங்களின் எண்ணங்கள் நிறைவேறும் உங்களின் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் பண விசயத்தில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது.

மீனம்:

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் வக்ர சஞ்சாரம் திடீர் அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு அதிகாரமுள்ள பதவிகள் தேடி வரும். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக உற்சாகமாக வேலையை செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் உங்களின் புத்திசாலித்தனம் அதிகமாகும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். மனைவி வழி உறவினர்களின் ஆதரவும் மனைவி வழியில் சொத்துக்களும் கிடைக்கும்.