லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தில் இருந்து ‘நா ரெடி..’ பாடல் முன்பு வெளியானது.
இந்தப் பாடலில் போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான வரிகள் இடம்பெற்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த பாடலின் சில வரிகளை சென்சார் போர்டு நீக்கியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘லியோ’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. முன்னதாக படத்திலிருந்து முதல் பாடலாக ‘நா ரெடி’ என்ற பாடல் வெளியிடப்பட்டு இருந்தது.
இதில் இடம்பெற்றிருந்த ‘பத்தாது பாட்டில் நான் குடிக்க அண்டாவை கொண்டா சியர்ஸ் அடிக்க… மில்லி உள்ளே போனா கில்லி வெளியே வருவான்’ என்ற வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான இந்த வரிகளை விஜய் போன்ற முன்னணி நடிகர் சொல்வது ஏற்க முடியாது என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் சென்சார் போர்டு இந்த வரிகளை நீக்கியுள்ளது. 4.17 நிமிடங்கள் கொண்ட இந்த பாடலில் 32 விநாடிகள் நீக்கப்பட்டள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இருப்பினும் இந்த பாடல் வரிகள் நீக்கம் தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.