ஒருவரது உடலால் போதுமான கணைய நீரை (இன்சுலின்) உற்பத்தி செய்ய முடியாமை அல்லது அவரது உடல் கணைய நீருக்குத் தகுந்த முறையில் பதில்வினை ஆற்ற முடியாமை ஆகிய காரணங்களால் ஏற்படும் நீரிழிவு நோய் ஒரு நீடித்த நோயாகும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தலும், மிகை தாகமும், எடை இழப்பும், மங்கலான பார்வையுமே நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும்.
கடந்த 2014ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 422 மில்லியன் மக்களுக்கு (11ல் ஒருவருக்கு) இந்நோய் இருந்தது.
2015ல் இந்தியாவில் இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 69.1 மில்லியனாகும்.
அதேபோல், கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் சர்வதேச அளவில் நீரிழிவு நோயால் 40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிக நீரிழிவு நோயாளிகள் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளதும், உலகின் ஒட்டுமொத்த நீரிழிவு நோயாளிகளில் 6ல் ஒரு பங்கினர் இந்தியர்கள் என்பதும் கவலையளிக்கும் செய்திகளாகும்.
கொரோனா நோய் தொற்றால் நீரிழிவு நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு, இதய பாதிப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. எனவே நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகும்.
இந்தியாவில் முதல் வகை நீரிழிவால் (டைப்-1) பாதிக்கப்படும் சிறார், இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் கணையம் இன்சுலினை உற்பத்தி செய்வதை நிறுத்துவதால் ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்கிறது. பெரும்பாலும் மரபணு ரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது. 4 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
நீரிழிவு முதல் வகையால் பாதிக்கப்பட்டோர், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்க வேண்டும். ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் எடையை சீராக வைத்திருக்க வேண்டும். சிறாருக்கு போதுமான ஊட்டச்சத்து உணவுகளை வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களது வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கும். உப்பை குறைவாக பயன்படுத்த வேண்டும். இனிப்புகளை தவிர்க்க வேண்டும்.
நாள்தோறும் 3 வேளை உணவு உட்கொள்ளும் பழக்கத்தை மாற்றி,6-7 முறை சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதுடன் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பரிசோதிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி இன்சுலின் மருந்தை செலுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.