நீதிபதி வடிவேல்

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிபவர் வடிவேல். இவரின் மனைவி புனிதா, மகள் ரீமா சக்தி, மகன் நிஷாந்த் சக்தி.

இவர் தனது மகள் மற்றும் மகனை முதல் வகுப்பு முதல் அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்.

ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மகள் ரீமாசக்தி 10ம் வகுப்பும், இதே பள்ளியில் நிஷாந்த் சக்தி எட்டாம் வகுப்பும் முடித்துள்ளனர்.

இந்நிலையில், அண்மையில் ஈரோட்டில் இருந்து அவிநாசிக்கு, நீதிபதி மாறுதலானதையடுத்து, நிஷாந்த் சக்தியை அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பில் சேர்த்தார்.

இதுகுறித்து நீதிபதி வடிவேல் கூறியதாவது: “நான் அரசுப் பள்ளியில் படித்து, வழக்கறிஞர் பட்டம் பெற்று, அரசு உதவி வழக்கறிஞராக, 2014ஆம் ஆண்டு மாநிலத்திலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றேன். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வாயிலாக தேர்வு எழுதி நீதிபதியாக பணிபுரிகிறேன். அரசு பள்ளிகளில் சிறு குறைகள் இருக்கத்தான் செய்யும். அப்படி இருக்கும்போதுதான் மாணவர்களிடையே தேடலும், ஆர்வமும் அதிகரிக்கும். நாட்டில் அரசு துறைகளில் பணிபுரியும் 60 சதவிகிதத்தினர் அரசு பள்ளியில் படித்தவர்கள்தான். அரசு துறைகளில் பணிபுரிபவர்கள் அவர்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும்..” என்றார்.

நீதிபதி தன் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்து, பிற அரசு ஊழியர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் அவரது மெச்சத்தக்கப்பணியை அறிந்து, பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.