ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் திட்டம் ஓய்வு காலத்துக்கு பிறகு கைகொடுக்குமா?

இந்தியாவை பொறுத்த வரையில் தற்போதைய நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பென்ஷன் கிடையாது.

அந்த வகையில் பலரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பென்ஷன் திட்டத்தில் (Pension Plan) பலரும் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்கள். அல்லது ஓய்வுக் கால பணத்தை மொத்தமாக ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றின் பாலிசியில் போட்டு விட்டு மாதந்தோறும் குறிப்பிட்டத் தொகையை பெற்று வருகிறார்கள். முதலீட்டுக்கு கிடைக்கும் இந்தத் தொகை ஆண்டளிப்பு (Annuity) இருக்கிறது.

வருமானம் எவ்வளவு?

தற்போது ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பென்ஷன் பிளான்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 6 முதல் 8 சதவிகிதம் வரைக்கும் வருமானம் கிடைத்து வருகிறது. இது பணவீக்க விகித அளவுக்கு அல்லது அதை விட சிறிது அதிகமாக இருக்கிறது என்பதால் மிகவும் லாபகரமானது என்று சொல்ல முடியாது, இந்த ஆண்டளிப்பு தொகை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் வருமானம் என்பது நிலையானதாக இருக்கும்.

ஆண்டளிப்பு வகைகள்..!

  1. ஆயுள் காலம் முழுவதும் ஒரே தொகையாக கிடைக்கும். போட்ட, முதல் திரும்பக் கிடைக்காது.
  2. 5,10,15, 20 ஆண்டுகள் ஒரே தொகை வழங்கப்படும். அதன் பிறகு முதலீடு செய்தவர் உயிருடன் இருந்தால் அப்போது நிர்ணயிக்கப்படும் தொகை மீதி காலத்துக்கு வழங்கப்படும்; முதலீடு செய்த தொகை திரும்பக் கிடைக்காது.
  3. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை ஒரே தொகை வழங்கப்படும் இறப்புக்குப்பின் வாரிசுக்கு பணம் கிடைக்கும்.
  4. ஆயுள் காலம் முழுவதும் பென்ஷன் வழங்கும் பென்ஷன். தொகை ஆண்டுக்கு 3% என்பது போல் உயர்ந்து கொண்டே போகும். போட்ட முதல் திரும்ப கிடைக்காது.
  5. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்ஷன் அவருக்கு வழங்கப்படும். அதன் பிறகு அவருடைய துணைவருக்கு (கணவன் / மனைவி) 50% பென்ஷன் வழங்கப்படும். போட்ட பணம் திரும்பக் கிடைக்காது.
  6. முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை 100% பென்ஷன் கிடைக்கும். அதன் பிறகு அவருடைய துணைவருக்கும் அதே 100% பென்ஷன் கிடைக்கும். முதலீட்டுத் தொகை திரும்ப வராது.

7.முதலீட்டாளர் உயிருடன் இருக்கும் வரை அவருக்கு 100% பென்ஷன் கிடைக்கும். அதன் பிறகு அவருடைய துணைவருக்கும் அதே 100% பென்ஷன் வழங்கப்படும். இருவரின் காலத்திற்குப் பிறகு வாரிசுக்கு முதலீடு திரும்ப கிடைக்கும்.

இந்தத் திட்டங்களின் மூலமான தொகையை மாதம் / காலாண்டு/ அரையாண்டு/ ஆண்டுக்கு ஒரு முறை பெற்றுக் கொள்ளும் ஆப்ஷன் இருக்கிறது.

கூடுதல் விவரங்கள்..!

பாலிசியை தனியாவோ, கணவன் – மனைவி இணைந்தோ எடுத்துக் கொள்ளலாம்.

நாமினி நியமிக்கும் வசதி உண்டு.

பாலிசி பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெறும் வசதி கிடையாது.

பொதுவாக, ஆண்டளிப்பு திட்டங்களில் இடையில் வெளியேற முடியாது.

வருமான வரி:

இந்த பென்ஷன் பிளான்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரி பிரிவு 80C-ன் துணைப் பிரிவான 80CCC -ன் கீழ் நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை இருக்கிறது.

இந்தத் திட்டத்தில் ஆண்டளிப்பு தொகை பெற போகிற காலத்தில் சேர்ந்திருக்கும் தொகுப்பு நிதியில் 33 சதவிகித தொகைக்கு வருமான வரி கிடையாது. மீதித் தொகை பென்ஷன் வழங்கும் கணக்கில் இருக்கும். இந்த ஆண்டளிப்பு தொகை என்பது ஒருவரின் சம்பளம் போல் கணக்கிடப்பட்டு வருமான வரி விதிக்கப்படும். ஒருவர் அவரின் அடிப்படை வரி வரம்புக்கு ஏற்ப வருமான வரிக் கட்ட வேண்டும்.

15 ஆண்டு முதிர்வில் பெறும் பி.பி.எஃப் முதலீட்டுத் தொகைக்கு வருமான வரி எதுவும் கிடையாது. என்.பி.எஸ் முதலீட்டில், 60 வயதில் பெறும் 60 சதவிகித தொகைக்கு வரி எதுவும் கிடையாது. அந்த வகையில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பென்ஷன் பிளான்கள் பின் தங்குகின்றன.

மாற்று முதலீட்டுத் திட்டங்கள்…!

பணி ஓய்வுக் காலத்தில் பணவீக்க அளவுக்கு நிலையான வருமானம் எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்றதாக இந்தத் திட்டங்கள் இருக்கின்றன. விலைவாசி உயர்வை விட அதிக வருமானம் எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஏற்ற திட்டம் அல்ல.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள், ஹைபிரிட் ஃபண்ட்கள் மற்றும் கடன் ஃபண்ட்களின் முதலீட்டுக் கலவை (Portfolio), கடன் ஃபண்ட்களின் தொகுப்பு நிதியிலிருந்து சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான் (Systematic Withdrawal Plan -SWP) மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு எடுத்துக் கொள்ள முடியும்.