பட்ஜெட் கூட்டத்தொடர்: நாளை முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய அமைச்சர்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) நடப்பு நிதியாண்டின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வழக்கமாக ஜூலை இறுதியில் தொடங்கி நடைபெறும். நடப்பாண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற்றதால், மழைக்கால கூட்டத் தொடா் பட்ஜெட் கூட்டத் தொடராக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், நடப்பு ஆண்டின் 2-ஆவது பட்ஜெட் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 22) தொடங்கி 19 அமா்வுகளுடன் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். நாட்டின் முக்கியப் பொருளாதார அளவீடுகளை அடிக்கோடிட்டுக் காட்டும் இந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும்.

நிகழாண்டு இறுதியில் மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், பட்ஜெட்டில் அந்த மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தோ்தலையடுத்து ‘கூட்டணி’ ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் இந்த முழு பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய சமூக-பொருளாதாரம் சாா்ந்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.

தனிநபா் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு, ‘80-சி’ பிரிவின் கீழ் வழங்கப்படும் வருமான வரி விலக்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்பது நடுத்தர மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

புதிய மசோதாக்கள்: பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா, 90 ஆண்டுகள் பழைமையான வானூா்தி சட்டத்துக்கு மாற்றான சட்ட மசோதா, நிதி மசோதா-2024 உள்பட 6 புதிய மசோதாக்கள் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இதுதவிர வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம்-1949, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல், பொறுப்பு மாற்றம்) சட்டம் – 1970 ஆகியவற்றில் திருத்தங்களும் கொண்டுவரப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.