மின்சார ரெயிலில் ஏசி பெட்டி இணைப்பு- தெற்கு ரெயில்வே முடிவு

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது. அந்த வகையில், தெற்கு ரெயில்வேயின் சென்னை ரெயில்வே கோட்டத்தின் கீழ் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. தினமும் 600-க்கும் மேற்பட்ட சேவைகள் நடைபெறுகிறது. பயணிகளின் வசதி மற்றும் கோரிக்கைக்கு ஏற்ப புதிய திட்டங்களை ரெயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது.

இதற்கிடையே, கோடை காலத்தில், மின்சார ரெயில்களில் ஏ சி பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து, சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் ஏ சி ரெயில் பெட்டியை இணைப்பது குறித்து ஆய்வு செய்யுமாறு தெற்கு ரெயில்வேக்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரை செய்திருந்தது.

எனவே, மின்சார ரெயில்களில் ஏ சி பெட்டிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை தெற்கு ரெயில்வே ஆய்வு செய்தது. பின்னர், ஏ சிபெட்டிகளை இணைக்க முடிவு செய்து பெட்டிகளை தயாரிப்பதற்கான பணியை தெற்கு ரெயில்வே தொடங்கியது. பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ சி எப்) ஏ சி ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

சென்னை ரெயில்வே கோட்டத்தில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே வரும் நவம்பர் மாதத்தில் இதற்கான சோதனை ஓட்டத்தை நடத்தவும் தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏ சிபெட்டிகளை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பெரம்பூரில் உள்ள ஐ சி எப்பில் ஏற்கனவே மும்பை புறநகர் மின்சார ரெயிலுக்காக ஏ சி பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தெற்கு ரெயில்வேக்கு 12 ஏ சி பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் புறநகர் மின்சார ரெயில்களில் ஏ சி பெட்டிகளை இணைத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ சி வசதி கொண்ட மின்சார ரெயில் பெட்டிகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.