தங்கப் பத்திர திட்டத்தை கைவிடுகிறதா மத்திய அரசு?

டெல்லி: மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை கைவிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2015 ஆம் ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறையை தீர்க்கவும், தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கிலும் மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை அறிமுகம் செய்தது.

மக்கள் தங்க நகைகளில் முதலீடு செய்வதை தடுக்கவும் தங்க பத்திரங்களில் முதலீடு செய்வதை ஈர்க்கவும் இதில் செய்யும் முதலீடுகளுக்கு ஆண்டுதோறும் வட்டியும் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. எனவே ஏராளமானவர்கள் தங்களுடைய பணத்தை தங்க பத்திரங்களில் முதலீடு செய்தனர். இந்நிலையில் நடப்பு ஆண்டில் இதுவரை அரசு தங்க பத்திர வெளியீடு குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை.


தங்கத்தின் விலை கடந்த 9 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே அரசு தங்க பத்திரம் மூலம் திரட்டிய பணத்தைவிட பல மடங்கு தொகையை திரும்ப வழங்க வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. இது அரசுக்கு பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. உதாரணமாக முதல் முதலில் அரசு தங்க பத்திரத்தை வெளியிட்ட போது 245 கோடி ரூபாயை நிதியாக திரட்டியது.

அப்போது 49 லட்சம் யூனிட் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 2,684 ரூபாய் என இருந்தது. அதுவே முதிர்ச்சி அடைந்து திரும்ப அந்த முதலீட்டாளர்களுக்கு வழங்கும்போது 6132 ரூபாய் என ஒரு கிராமின் விலை உயர்ந்திருந்தது. கிட்டத்தட்ட 120% இது அதிகமாகும். அது மட்டும் இன்றி ஆண்டுக்கு 2.5% வட்டியும் வழங்க வேண்டும். 245 கோடி நிதியாக திரட்டி அரசு அதனை திரும்ப வழங்கும் போது 560 கோடி ரூபாய் தங்கத்தின் விலை மற்றும் 49 கோடி ரூபாய் வட்டி என 610 கோடி ரூபாயை செலவிட வேண்டி இருந்தது.

எனவே இந்த திட்டத்தை கைவிடுவதே சிறந்தது என அரசு கருதுகிறதாம். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 ஆம் நிதியாண்டு பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது. தற்போது அரசு நிதி பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. எனவே அது தொடர்பான முக்கிய நடவடிக்கையாக புதிய தங்க பத்திரங்கள் வெளியீடு கிடையாது என்ற அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.