இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரான தொம்மராஜு குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற World Chess Championship தொடரின் 14வது போட்டியில் சீனாவின் டிங் லாரனை வென்றதன் மூலம் உலகின் வயதில் இளைய கிளாசிக்கல் செஸ் சாம்பியன் என்ற வரலாற்றை குகேஷ் படைத்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் என்ற பட்டம் செஸ் உலகில் கவுரவம் மிக்க சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 1886 முதல் உலகில் வெறும் 17 வீரர்கள் மட்டுமே இத்தகைய சாதனையை படைத்துள்ளனர். குகேஷ்-க்கு முன்னதாக இந்த சாதனையை படைத்த இந்தியர், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆவர்.
World Chess Championship 14 சுற்றுகளைக் கொண்ட இந்த போட்டியில் 7.5 புள்ளிகளை பொறும் வீரர் சாம்பியன் பட்டத்தை வெல்வார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற அடுத்த 6 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன. இதனால் இருவரும் 4.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற 11வது சுற்றில் குகேஷ், 12வது டிங் லிரெனுடன் வெற்றி பெற 13வது சுற்று டிராவில் முடிந்தது.
இதன் காரணமாக 6.5 புள்ளிகளுடன் இருவரும் சமநிலையிலிருந்தன. இதனால் இந்த தொடரில் வெற்றி பெறப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் 14வது சுற்று இன்று தொடங்கியது. இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த டி.குகேஷ் 7.5 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்-க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு அவரது எக்ஸ் பதிவில், “உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற இளம் வீரர் குகேஷுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். சபாஷ் குகேஷ். ஒவ்வொரு இந்தியர் சார்பாகவும், நீங்கள் எதிர்காலத்தில் புகழ் பெற வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி அவரது எக்ஸ் பதிவில், “மிக சிறப்பான சாதனை படைத்த குகேஷ்-க்கு வாழ்த்துகள். இந்த வெற்றி அவரது ஒப்பற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் தளராத உறுதி ஆகியவற்றின் விளைவால் கிடைத்துள்ளது. அவரது வெற்றி, சதுரங்க வரலாற்றில் அவரது பெயரை பொறித்தது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான இளம் வீரர்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டியுள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.