‘லேசாகத் தலைவலிக்கிறது’ என்று சொன்னால் கூட, அனைவரும் சொல்லும் முதல் வார்த்தை ஆஸ்பத்திரிக்கு சென்று முழு உடல் பரிசோதனை செய்து பார் என்பது தான்.
அந்த அளவுக்கு படித்தவர்கள் முதல் படிக்காத பாமரர்கள் வரை அனைவரது மனதிலும் பதிவாகி விட்ட ஒரு வார்த்தையாகிவிட்டது முழு உடல் பரிசோதனை.
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நாம் நமது உடல் நலனை நன்றாக கவனித்து கொள்கிறோமா என்று நம்மை நாமே முதலில் கேட்டு பார்த்தால், இல்லை என்று தான் சொல்ல தோன்றும். அந்தளவுக்கு உடல் நலனை பற்றி அக்கறைப்படுவதற்கோ அல்லது கவலைப்படுவதற்கோ நமக்கு அதற்கான நேரம் இருப்பதே இல்லை.
உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதைப் பொறுத்தவரை பலரும் நோய் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றே நினைக்கின்றனர்.
நோய் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும் வரை காத்திருக்கின்றனர். உதாரணத்துக்குத் தலைச்சுற்றல், மயக்கம் வந்தால் உயர் ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது. அதிகமாகச் சிறுநீர் கழிப்பது, புண் ஆறத் தாமதம் ஆகிறது என்றால் நீரிழிவு நோய் வந்துவிட்டது என்று அர்த்தம். இப்படி நோய் வந்த பிறகு உடலை போட்டு சிரமப்படுத்துவதைவிட, அந்த நோய் தலையெடுக்கும் முன்பே அதனை கண்டுபிடித்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து சிகிச்சை மேற்கொள்வது தான் புத்திசாலித்தனமானது. உடல் வலி மற்றும் அறுவை சிகிச்சை போன்றவற்றையும் தவிர்த்து விடலாம். இதற்கு முழு உடல் பரிசோதனை முக்கியம்.
எல்லோரும் முழு உடல் பரிசோதனை செய்து கொள் என்று சொல்கிறார்களே உண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்? என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
நமது உடலில் ஏதாவது ஒரு நோய் வருவதற்கு முன்பே அதனை கண்டறிந்து நமது உடல் நலனை பாதுகாத்துக் கொள்ளலாம். அந்த வகையில் முழு உடல் பரிசோதனையானது அதற்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. இன்றை இளம் தலைமுறையினரிடம் ‘நோய் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்ற மனநிலையே மேலோங்கி நிற்கிறது. நோய் முற்றிய பின்னரே ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். முன்னதாகவே பார்த்து விட்டால் நன்றாக இருக்கும்.
இருந்தாலும், எல்லோரும் இந்த பரிசோதனை செய்து கொண்டு தான் ஆக வேண்டும் என்பதில்லை. பொதுவாக, 35 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, ரத்தப் புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற ஏதாவது மரபு வழி நோய்கள் இருந்தால் அந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 35 வயதுக்கு முன்பாக இந்தப் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது. பல்வேறு நோய் அறிகுறிகள் உள்ளவர்களும் இந்த சோதனையை மேற்கொள்ளலாம். இதுமட்டுமின்றி தங்கள் உடம்பில் நோய் இருக்கிறதா? இல்லையா? என்பதை பார்க்க விரும்புபவர்களும் முழு உடல் பரிசோதனை செய்து பார்த்து கொள்ளலாம்.
புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுபவர்கள் போன்றோர் வருடத்துக்கு ஒரு முறை கட்டாயம் இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். அதிக டென்ஷன் உள்ள வேலைகளை செய்வோர், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களும் செய்ய வேண்டும். உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் எந்த நோய் இல்லாவிட்டாலும் 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தொடக்க நிலை மற்றும் முற்றிய நிலையில் உள்ள நோய்களை நாம் கண்டறிய முடியும். அப்படி கண்டறிந்தால் அதற்கான சிகிச்சைகளை அப்போதே தொடங்கி அதனை செய்து கொள்ள முடியும். இதற்கு முழு உடல் பரிசோதனை மிகவும் அவசியமானது.
என்னென்ன பரிசோதனைகள்?
பொதுவாக ரத்தம், சிறுநீர், மலம் தொடர்பான பரிசோதனைகள், மார்பக எக்ஸ்ரே, காது, மூக்கு, தொண்டை, பல், கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஈசிஜி, டிஎம்டி, எக்கோ, கார்டியோ கிராம், பெண்களுக்கு மேமோகிராம், ஆஞ்சியோ கிராம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இந்த முழு உடல் பரிசோதனையில் உள்ளது. இதுமட்டுமின்றி முழு உடல் பரிசோதனை செய்ய வருபவர்களிடம் அவர்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும் கேட்டு அறியப்படும். அப்போது அவர்களுக்கு இந்த சிகிச்சை முறையிலோ அல்லது வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்து எங்களிடம் கேட்பவர்களுக்கு அதற்கான விளக்கத்தையும் கொடுக்கிறோம்.
இந்த முழு உடல் பரிசோதனையில், நோய் அறிகுறிகளுக்கு ஏற்பவும் பரிசோதனைகள் விரிவடைந்து கொண்டே செல்கின்றது. முழு உடல் பரிசோதனையின்போது ஏதேனும் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால், அதை உறுதி செய்வதற்காக கூடுதல் பரிசோதனைகள் தேவைப்படும். முழு உடல் பரிசோதனையின்போது அந்த நபருக்கு கூடுதல் பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது.
முழு உடல் பரிசோதனை செய்யும்போது, நமது உடலில் உள்ள பல், கண், காது, மூக்கு, தொண்டை போன்ற பல உறுப்புகளில் ஏற்படும் நோய்களை முன்கூட்டியே நாம் தெரிந்துகொள்ள முடியும். ரத்த பரிசோதனையில் ரத்த சோகை, ரத்தப் புற்றுநோய், நீரிழிவு நோய் பாதிப்பு தெரியவரும். நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு, அளவைக் கண்டறிவதன் மூலம் இதயத்தின் இயங்கும் தன்மையை அறியலாம்.
இந்த சோதனையின் மூலம் மாரடைப்பு அபாயத்தையும் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் அதனை தடுப்பதற்கான மருத்துவ சிகிச்சையையும் நாம் எடுத்து கொள்ளலாம்.
இ.சி.ஜி., டி.எம்.டி.(ட்ரெட் மில் டெஸ்ட்) மற்றும் ஆன்ஜியோகிராம் மூலம் மாரடைப்பு நோயை கண்டுபிடிக்கலாம். ரத்த அழுத்த அளவு பரிசோதனையில் ரத்தக் கொதிப்பு வாய்ப்புகளைக் கண்டறியலாம். எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் மற்றும் புராங்கைட்டிஸ் பரிசோதனை மூலம் நுரையீரல் பாதிப்பு, நுரையீரல் புற்றுநோய் மற்றும் நிமோனியா பாதிப்புகளை கண்டறியலாம். இதன் மூலம் ஏற்பட வாய்ப்புள்ள மாரடைப்பு, பக்கவாதத்தையும் கண்டுபிடிக்கலாம். மேமோகிராம் பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோயைக் கண்டறியலாம்.