சந்திராஷ்டமத்தின் பாதிப்பிலிருந்து விடுபட… எளிய வழி..!

சந்திராஷ்டமத்தின் பாதிப்புகள் நீங்க சில எளிமையான விஷயங்களை செய்தாலே பயமின்றி அந்த நாளை கடந்து செல்லலாம் என்பது ஜோதிடர்களின் கருத்தாகும். சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் + அஷ்டமம் = சந்திராஷ்டமம் என்பதாகும். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் இரண்டே கால் நாட்களைத்தான் சந்திராஷ்டம காலம் என்கிறோம்.

ஒருவரின் மனதுக்கு அதிபதி சந்திரன். அவர் ஒரு ராசிக்கு 8-வது வீட்டில் மறைவு பெற்றிருக்கும்போது மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். மனம் அமைதி இன்றி தவிக்கவும் நேரிடும். எனவே, சந்திராஷ்டமம் தினத்தன்று எந்தவித புது முயற்சியிலும் ஈடுபடாமல் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

சந்திராஷ்டமம் என்றாலே இன்றைக்கு எல்லோர் மனதிலும் ஒரு அச்ச உணர்வு ஏற்படுகிறது. ஆனால் அதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. இது எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் தொல்லை தராது. மேலும், ரிஷபம் மற்றும் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் நல்லது மட்டுமே செய்யும் என்பது ஜோதிடர்கள் கருத்தாகும்.

சந்திராஷ்டம தினத்தில் காலை எழுந்தவுடன் குளித்து முடித்து விட்டு, சந்திரனை நினைத்து ஓம் ஸ்ரீ சந்திராய நமஹ என்ற மந்திரத்தை உச்சரித்துவிட்டு அதன் பின்பு அன்றாட பணிகளைத் தொடங்கினால் சந்திராஷ்டமத்தால் உங்களுக்கு பெரிய பிரச்னைகள் எதுவும் வராது.

சந்திராஷ்டம நாளில் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்வது நல்லது. அம்மன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வரலாம். சந்திராஷ்டம நாளில் எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன்பு குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வணங்கிவிட்டு ஆரம்பிப்பது நன்மை தரும்.