நிரம்பியது ஆழியார் அணை... மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருவதால் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அணைகளிலும் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை செய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக சோலையார், ஆழியார், பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் ஆழியார் அணைக்கு தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் இருந்தது. நீர்வரத்து அதிகரித்தால் அதன் முழு கொள்ளளவான 120 அடியில் 119.50 அடி ஒரு சில நாட்களில் எட்டியது. பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை கடந்த ஒரு மாதத்தில் ஏற்கனவே 5 முறை நிரம்பிய நிலையில் தற்போது 6-வது முறையாக அணை நிரம்பி உள்ளது. ஆழியார் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1, 225 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து இன்று காலை அணையின் பாதுகாப்பு நலன் கருதி 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 1, 347 கன அடி உபரி நீர் ஆழியார் ஆற்றில் திறந்து விடப்பட்டது.

தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாக பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் அபாய ஒலியானது எழுப்பப்பட்டது. ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர், ஆழியார் ஆற்றில் கரைபுரண்டு ஓடி வருகிறது. ஆழியார் நிரம்பி ஆறு பெருக்கெடுத்து ஓடி வருவதால், இந்த ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என கோவை, பொள்ளாச்சி பகுதி மக்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.