சென்னை-பிரிட்டன் நாட்டை சேர்ந்த, ‘ஒன்வெப்’ குழும நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை சுமந்தபடி, இந்திய ராக்கெட், வரும் 26ம் தேதி காலை 9:00 மணிக்கு, விண்ணில் பாய உள்ளது. ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு போன்றவற்றுக்கு பயன்படும் செயற்கைக்கோளை வடிவமைக்கிறது. அந்த செயற்கைக்கோள்களை BSLV – GSLV வகை ராக்கெட் உதவியுடன், புவி வட்ட பாதையில் நிலைநிறுத்துகிறது. இது தவிர அந்நிறுவனம், வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த, ‘ஒன்வெப்’ குழும நிறுவனத்தின் ‘நெட்ஒர்க் ஆக்சஸ் அசோசியேட்ஸின்’ 72 செயற்கைக்கோள்களை விண்ணில் நிறுத்த, இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது.
முதல் கட்டமாக 36 செயற்கைக்கோள்களை, இஸ்ரோ GSLV மாக் – 3 வகையை சேர்ந்த LVM 3 – M2 ராக்கெட் உதவியுடன், 2022 அக்., 23ல் விண்ணில் நிலைநிறுத்தியது.
இரண்டாவது கட்டமாக, ‘ஒன்வெப்’ நிறுவனத்தின் 5,805 கிலோ உடைய, 36 செயற்கைக்கோள்களை சுமந்தபடி, LVM 3 – M3 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து, வரும் 26ம் தேதி காலை 9:00 மணிக்கு விண்ணில் பாய உள்ளது.