வாழைப்பூ சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை இருக்கா...

சில பூக்கள் நம் நோய் தீர்க்கும் மருந்தாகும். உயிர் காக்கும் கவசமாகவும் பயன்படுகின்றன. அந்த வகையில் நம் ஆயுளைப் பெருக்கி நீண்ட காலம் வாழ வைக்கும் அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்டது ‘வாழைப்பூ’ . இதன் மகத்துவதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

குலை வாழையைத் தலைமகளோடு ஒப்பிடுகிறார்கள், தமிழர்கள். அப்படியென்றால், எந்த அளவுக்கு நமக்கு வாழைப்பூ பயன்படுகிறது என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும். வாழையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்தரக்கூடியவை. குறிப்பாக, வாழைப்பூ அதிகப் பயன்தரக்கூடியது.

வாழைப்பூ சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் அதிக அளவு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும்.

வாழைப்பூ பித்தம், வாதம் உடலில் ரத்தக் குறைவு, கிராணி, வயிற்றில் பூச்சி முதலிய வியாதிகளுக்கு சஞ்சீவி போன்றது. வாழைப் பூவை நறுக்கி சாறு எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மேற்கண்ட பிணிகள் எல்லாம் உடனே குணமாகும்.

வாழைப்பூ சாற்றில் தயிரைக் கலந்து உட்கொண்டால் ரத்தக் கிராணி, பெரும்பாடு முதலியவை நீங்கும்.

வாழைப்பூவை இடித்து சிற்றாமணக்கு எண்ணெய்யை விட்டு வதக்கி, கைகால் எரிச்சல் உள்ள இடத்தில் ஒற்றடமிட்டால் எரிச்சல் போகும். வாழைப்பூவை வாரத்திற்கொரு முறையேனும் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. உடல் சூடு குறையும். குடல் புண் ஆறும்.

பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்று வலி ஆகியவற்றை போக்கும்.

வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும்.

மூலக்கடுப்பு, சீதபேதி, மலச்சிக்கல், வாய்ப்புண், செரியாமை, இரத்த மூலம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும். வாழைப்பூவில் உப்பு போட்டு வேக வைத்து அதன் சாறை குடித்தால் வயிற்றுவலி நீங்கும்.

சிலர் குழந்தையின்மையால் மிகுந்த மனவேதனைக்கு ஆட்படுவர். அவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும்.

‘வாழையடி வாழையாக வாழ வேண்டும்’ என்பது பழமொழி. நம் ஆயுளையும் வாழையடி வாழையாக அதிகரிக்கச் செய்யும் வாழைப்பூ நமக்கு கிடைத்த அதிசயமே!