டாடா குழுமம் இந்தியாவுக்கு வெளியே முதன் முறையாக பல்லாயிரம் கோடி முதலீட்டில் பேட்டரி ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் கூறுகையில், ‘தென்மேற்கு இங்கிலாந்து சோமர்செட் மாகாணத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் பேட்டரி செல் தயாரிப்பு ஆலையை டாடா குழுமம் அமைக்கவுள்ளது. இதற்காக சுமார் ரூ.43,000 கோடி முதலீடு செய்ய உள்ளோம்.
இந்த ஆலை 2026-ல் செயல்பாட்டுக்கு வரும். இதன் மூலம், 4,000 பேருக்கு நேரடியாகவும், அதன் விநியோக சங்கிலித் தொடர் மூலம் ஆயிரக்கணக்கானோரும் வேலைவாய்ப்புகளை பெறுவர். இந்த முதலீட்டால் மின் வாகன சந்தை வளர்ச்சி அடையும்” என்றார். சுற்றுப்புறச் சூழல் மாசு அடைவதால் 2030-லிருந்து பெட்ரோல், டீசல் வாகன விற்பனைக்கு தடைவிதிக்க பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற பிரிட்டன் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.