மத்திய அரசு மின்சார விதிகளில் செய்துள்ள திருத்தத்தால், வீட்டு பயனாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு நேரத்திற்கேற்ப மின்கட்டணம் உயர்த்தி அமல்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேரத்திற்கேற்ப மின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் திருத்தம் வீடுகளுக்கு பொருந்தாது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் தமிழக ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மட்டுமே உள்ளது என்றும், மாலை நேர உச்ச காலங்களில் 20% மின் கட்டணம் கூடுதலாக உயர்த்தி நிர்ணயம் செய்யும் மத்திய அரசின் விதியால், தமிழகத்தில் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போதுள்ள மின் கட்டண ஆணைப்படி, உச்சநேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் (Smart Meters) பொருத்துவது தொடர்பாக அபராத தொகை ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.