இன்று குரூப் 2 தேர்வு: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட TNPSC...

குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 763 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று நடைபெறும் குரூப் – 2 தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி, தேர்வர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டபடி காலை 9 மணிக்கு முன்னதாக வந்துவிட வேண்டும்.

அதேபோல் 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள், எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.