காசி விஸ்வநாதர் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் சின்னையா சத்திரத்தில் உள்ளது. இங்கு வழிபட்டால் புத்திரதோஷம் தீரும்.
சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடி விநாயகர் கோயிலுக்கு பாத யாத்திரையாக வந்தார் காஞ்சி மஹாபெரியவர். செல்லும் வழியில் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள சின்னையா சத்திரத்தில் பக்தர் ஒருவரின் வீட்டில் தங்கினார். அந்த பக்தர், ‘புத்திர தோஷத்தால் தனக்கு குழந்தை இல்லை’ என வருந்திய போது காசிவிஸ்வநாதர், விசாலாட்சிக்கு கோயில் கட்டி வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்றார் மஹாபெரியவர். அதன்படி இங்கு விஸ்வநாதர் கோயில் கட்ட பலன் கிடைத்தது.
குழந்தைப்பேறு இல்லாதவர்கள் காசியாத்திரை சென்று, மூன்று நாள் கங்கையில் நீராடி விஸ்வநாதர், விசாலாட்சியை தரிசித்தால் தோஷம் நீங்கும். அதற்குரிய வசதி இல்லாதவர்கள் இங்கு வந்தால் பலன் கிடைக்கும். காஞ்சி மஹாபெரியவர் நட்ட மகிழமரம் தலவிருட்சமாக உள்ளது.
மூலவர் விஸ்வநாதர் கிழக்கு நோக்கியும், விசாலாட்சி தெற்கு நோக்கியும் உள்ளனர். அம்மன் சன்னதியிலுள்ள பிரதான வாசல் தினமும் திறக்கப்படுகிறது.
சுவாமி சன்னதியிலுள்ள வாசல் திருக்கார்த்திகையன்று மட்டும் திறக்கப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. விநாயகர், முருகன், துர்கை, தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன.
கோயிலைச் சுற்றியுள்ள கிராம மக்கள் வீட்டு நிச்சயதார்த்தம், திருமணம், சுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்துகின்றனர். விஸ்வநாதரின் அருளால் குழந்தைப்பேறு பெற்றவர்கள் முடிக்காணிக்கை செலுத்துகின்றனர்.