ஒரே ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு 14 லட்சமாக குறைவு...

தமிழ்நாட்டில் எஸ் எஸ் எல் சி மற்றும் பிளஸ்-2, கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர்கள், அரசு வேலை கனவுடன் தங்களுடைய கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்க தவறியவர்களுக்கு 2 மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ம் தேதி நிலவரப்படி, அரசு பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்து 30 ஆயிரத்து 345 ஆக இருந்தது. அது 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 31-ம் தேதி கணக்குப்படி, 67 லட்சத்து 61 ஆயிரத்து 363 ஆக குறைந்தது.

கடந்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 31-ம் தேதி நிலவரப்படி, 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 ஆக சரிந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ம் தேதி கணக்குப்படி, 53 லட்சத்து 74 ஆயிரமாக தடாலடியாக குறைந்துபோய் இருக்கிறது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 13 லட்சத்து 84 ஆயிரத்து 698 குறைவு ஆகும். விரிவாக பார்த்தோம் என்றால், கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 24 லட்சத்து 74 ஆயிரத்து 985 ஆண்கள், 28 லட்சத்து 98 ஆயிரத்து 847 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 284 பேர், மாற்றுத்திறனாளிகள் 1 லட்சத்து 49 ஆயிரத்து 803 பேர் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில், 18 வயதுக்கு கீழுள்ள பள்ளி மாணவர்கள் 10 லட்சத்து 69 ஆயிரத்து 609 பேர், 19 வயது முதல் 30 வயது வரையுள்ள இளைஞர்கள் 23 லட்சத்து 62 ஆயிரத்து 129 பேர், 31 வயது முதல் 45 வயது வரையுள்ள 16 லட்சத்து 94 ஆயிரத்து 518 பேர், 46 வயது முதல் 60 வயது வரையுள்ள 2 லட்சத்து 40 ஆயிரத்து 537 பேர், 60 வயதுக்கு மேல் உள்ள 7,323 பேர் அடங்குவார்கள்.

தற்போது, காலியாக உள்ள அரசு பணிகளின் அனைத்து நிலைகளுக்கும் டி என் பி எஸ் சி மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தியே நிரப்பப்பட்டு வருகிறது. ஆசிரியர் பணியிடங்களும் டி.ஆர்.பி., டி.இ.டி. தேர்வுகள் மூலமே நிரப்பப்படுகிறது.

இதனால், வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு இனி வேலையில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. அதனால், அங்கு பதிவு செய்வதற்கு யாரும் ஆர்வம் காட்டாத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் மேலும் இது குறையும் என்று கூறப்படுகிறது.