போலி மருந்துகளை தடுக்கும் வகையில், உயிர்காக்கும் 300 முக்கிய மருந்துகளின் அட்டைகளில், பிரத்யேகமாக, QR Code அச்சிட்டு விற்கும் நடைமுறை ஆகஸ்ட் 1ல் நடைமுறைக்கு வருகிறது. நாட்டில் விற்கப்படும் அனைத்து வகையான, மருந்து – மாத்திரைகளும், மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனாலும் சந்தையில், தரமற்ற மற்றும் போலி மருந்துகள் விற்பனை நடக்கிறது.
இவற்றை தடுக்கவும், முன்னணி நிறுவன பெயரிலான மருந்துகளின் தரத்தை உறுதி செய்யவும், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம், சில மாதங்களுக்கு முன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.அதில், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்உள்ளிட்ட முக்கியமான, 300 மருந்துகளின் அட்டைகளில், QR Code அல்லது Bar Code அச்சிட வேண்டும். இவற்றை ஸ்கேன் செய்யும்போது, மருந்தின் உட்கூறுகள் விவரம், தயாரிப்பாளர் விவரம், உற்பத்தி, காலாவதி தேதி உட்பட அனைத்து விபரங்களையும் அறிய முடியும்.இதன் வாயிலாக மருந்தின் உண்மைத் தன்மையை நுகர்வோர் அறியலாம். இந்த நடைமுறை, ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது.