வீடுகளுக்கு ஆன்லைனில் உடனடி அனுமதி- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்

புதிதாக வீடு கட்டுபவர்கள், கட்டிட அனுமதி பெற பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2024, 2025-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ‘சுயசான்றிதழ் மூலமாக பொதுமக்கள் கட்டிட அனுமதி பெறுவதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 2,500 சதுரஅடி வரையுள்ள மனைப்பகுதியில், 3,500 சதுரஅடி கட்டிடப் பரப்பளவிற்குள் தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் முதல்தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்திற்கு உட்பட்டு குடியிருப்பு கட்டிடத்தைக் கட்டுவதற்கு விரும்பும் பொதுமக்கள் சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட அனுமதியை எளிதாகவும், உடனடியாகவும் பெற முடியும்.

சுயசான்றிதழ் திட்டம் என்பது பொதுமக்கள் கட்டிட அனுமதிக்காக அலுவலகங்களுக்கு சென்றுவரும் நேரத்தை முழுமையாக தவிர்த்து, அதிகபட்ச வெளிப்படைத்தன்மையுடனும், நடைமுறையில் உள்ள கட்டிட விதிகளை எளிமைப்படுத்தியும் மக்கள் கடைப்பிடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.

தற்போதுள்ள ஒற்றைச்சாளர முறையின் மூலம் ஒப்புதல் பெறுவதை காட்டிலும், இந்த சுயசான்றிதழ் திட்டத்தில் ஒப்புதல் பெறும் நடைமுறை மிகவும் எளிதான வகையில் அமைந்து, பொதுமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும். இதுதொடர்பாக, ஒற்றைச்சாளர முறையில் சுயசான்றிதழ் திட்டத்திற்கான மென்பொருள் தொகுப்பு உருவாக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.

தற்போது குடியிருப்பு கட்டிடங்களுக்கான கட்டிட அனுமதி பெறுவதற்காக பெறப்படும் மொத்த விண்ணப்பங்களில், 72 சதவீத ஊராட்சிகளிடம் இருந்தும், 77 சதவீத பேரூராட்சிகளிடம் இருந்தும், 79 சதவீத நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிடம் இருந்தும் பெறப்படுகின்றன. அந்த விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் ஒற்றைச்சாளர முறையில் பரிசீலனை செய்யப்படுகின்றன.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இப்புதிய திட்டத்தின் கீழ் அனுமதி பெறும் கட்டிடங்களுக்கும், சாலைக்கும் இடையில் தளர்வு (1.5 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது), கூராய்வுக் கட்டணம் (சதுர மீட்டருக்கு ரூ,2), உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கான (ஐ மற்றும் ஏ) கட்டணங்கள் (சதுர மீட்டருக்கு ரூ,375) ஆகியவற்றில் விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் தேவையான கட்டணங்களை செலுத்தியபின் ‘கியூ.ஆர். கோடு’டன் கட்டிட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், முன் இடக்கள ஆய்வு மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, உடனடியாக கட்டுமானப் பணி மேற்கொள்வதற்கும் வழிவகை செய்து, கட்டிட முடிவுச்சான்று பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர மக்கள் இணையதளம் வாயிலாக சுயசான்றிதழ் அடிப்படையில் அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனைப்பகுதியில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு உடனடியாக ஒற்றைச்சாளர முறையில் கட்டிட அனுமதிகளை வழங்கும் ஒருங்கிணைந்த திட்டத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்து, 10 பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளை வழங்கினார்.