தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியான நிலையில் தமிழக அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7 சதவீதத்தில் இருந்து 2.18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இந்த குறைந்த உயர்வில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கோடு, வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18 சதவீத உயர்வையும் தமிழக அரசே ஏற்று, மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த முடிவால், வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது. வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.
வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிற்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும். இந்த ஆண்டு நாட்டின் பிற மாநிலங்களில் அனைத்து மின் இணைப்புகளுக்கும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு மின் கட்டணங்கள் உயர்த்தப்படாதது மட்டுமின்றி, வணிக மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கும் மிகக்குறைந்த அளவிலேயே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.