பாரா ஒலிம்பிக் போட்டி: ஒரே நாளில் 3 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா

17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி களம் காணுகிறது,

துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்று அசத்தினர்.

பெண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் அவனி லெகரா தங்கம் வென்றார். இதே போட்டியில் இந்தியாவின் மோனா அகர்வால் வெண்கலம் வென்றார்.

இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தனது பதக்க கனவை தொடங்கி உள்ளது. ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என 2 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், தடகளத்தில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிரீத்தி பால் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதன்மூலம் இந்தியா இன்று ஒரே நாளில் 3 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.