ஒரே அறிக்கை ஒட்டுமொத்த மலையாள சினிமாவையும் உலுக்கியுள்ளது. மலையாள திரை உலகில் பெண் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், புகார்கள் போன்றவை நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையின் மூலம் பொது வெளிக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நடிகைகள் பலரும், பிரபலமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களால் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளானதாக அடுத்தடுத்து புகார்களை முன்வைத்து வருகின்றனர். மலையாள நடிகர் சங்கத்தில் சேர்வதற்கே கூட பாலியல் சமரசத்திற்கு சிலர் நிர்பந்திப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த அறிக்கை எதிரொலியாக, ஆகஸ்ட் 27ம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நடிகர் மோகன்லால் விலகியுள்ளார். அவர் மட்டுமின்றி, அந்த சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் 17 பேரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
சங்கத்தின் உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பெண் கலைஞர்கள் வைத்திருப்பதால், சங்கத்தின் செயற்குழுவை கலைக்க வேண்டும் என்ற முடிவு அன்றைய தினம் நடைபெற்ற இணையவழி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
2024ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வு செய்யப்பட்ட அவர்களின் பதவிக் காலம் வரும் 2027-ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், சில மாதங்களிலேயே பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.