இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ்-ல் ஜூலை மாதம் அந்நாடு முழுவதும் பல வாரங்களாக மாணவர்கள் புரட்சியால் அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பங்களாதேஷ் நாடு எப்போதும் இல்லாத வகையில் அமைதியற்ற நாடாக மாறியது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், இன்று போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லமான Ganabhaban-க்குள் நுழைந்து மொத்த வீட்டையும் சூறையாடினர்.
இதற்கு முன்பே பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவுடன் வங்கதேசத்தை விட்டு ஹெலிகாப்டர் வாயிலாக இந்தியாவுக்குத் தப்பி வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவை அனைத்திற்கு முக்கியமான காரணமாக இருந்தது அந்நாட்டில் அமலிலிருந்த சர்ச்சைக்குரிய வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டு முறை தான், இதை எதிர்த்து மாணவர் போராட்டங்களில் தொடங்கியது நாடு தழுவிய நெருக்கடியாக அதிகரித்தது.
பிரதமர் ஷேக் ஹசீனா பங்களாதேஷ் நாட்டில் ஜனவரி மாதம் நடந்த பொதுத் தேர்தலில் 41.8% வாக்குகளைப் பெற்று மீண்டும் அதிகாரத்திற்கு வந்த நிலையில் பல வருடங்களாகச் சர்ச்சையிலிருந்த வேலைவாய்ப்பு இடஓதுக்கீட்டை மீண்டும் அமலாக்கம் செய்யும் முயற்சியில் இறங்கினார். இதனால் பங்களாதேஷ் முழுவதும் மாணவர்கள் எழுச்சியால் அரசியல் வன்முறை வெடித்தது. ஜூலை 31 வரையில் இந்த வன்முறை மூலம் பங்களாதேஷ் பொருளாதாரத்திற்கு 10 பில்லியன் டாலர் மதிப்பிலான இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டது. ஆனால் இப்போது பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு பங்களாதேஷ் நாட்டைவிட்டே வெளியேறிவிட்டார். இதனால் அந்நிய செலாவணி இருப்புகளை உயர்த்த போராடும் பங்களாதேஷ் நாட்டிற்கு 20 முதல் 40 பில்லியன் டாலர் வரையில் பாதிப்பு ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்க வேலை ஒதுக்கீட்டிற்கு எதிரான மாணவர் போராட்டத்தை அடக்க ஊரடங்கு உத்தரவு மற்றும் இணைய முடக்கம் போன்றவற்றின் மூலம் பிரதமர் பங்களாதேஷ் பொருளாதாரத்தில் $10 பில்லியன் தாக்கத்தை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை மொத்தமாக மீறியுள்ளது.
455 பில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட பங்களாதேஷ் இந்த மாபெரும் பிரச்சனையில் இருந்து வெளியேறுவது பெரும் சிக்கலாக இருக்கும். இலங்கையிலும் இதேபோன்ற நிலை தான் உருவானது, பங்களாதேஷ் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து ஒரு ஆபத்தான நிலையில் உள்ள வேளையில் அந்நாட்டின் அரசியலில் ஏற்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அந்நாட்டு தொழிலதிபர்களுக்குக் கொடுத்துள்ளது. ஜூன் மாதம் பங்களாதேஷ் நாட்டின் மொத்த அன்னிய செலாவணி கையிருப்பு $21.8 பில்லியன் மட்டுமே. பங்களாதேஷ் நாட்டின் அரசியல் எந்த அளவுக்கு வேகமாக சரி செய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு அந்நாட்டின் பொருளாதாரத்தில் கணக்கிடப்பட்டு உள்ள சரிவு குறைக்கப்படும். தற்போது 40 பில்லியன் டாலர் வரையில் அந்நாட்டின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையை விட்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்று விட்டார் என தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ராணுவம் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது.