மாமன்னன் திரைப்படத்தின் ஃபகத் பாசில் கதாப்பாத்திரம் மாரி செல்வராஜ் நினைத்ததற்கு மாறாக சாதி பெருமை பேசுவோருக்கு பயன்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வலம் வருகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி வருவதன் மூலம் பிரபலமானவர் மாரி செல்வராஜ். முதல் படமான பரியேறும் பெருமாள் தமிழகத்தில் மாற்றுச் சிந்தனையை ஏற்படுத்தியது. இவர் இயக்கத்தில் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கர்ணன் படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
அந்த வகையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வைகை புயல் வடிவேலு, பகத் பாசில் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. எல்லோரும் தனக்கு கீழ் இருந்து. அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று நினைக்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் கதை. தன்னுடைய மற்றப் படங்களைப் போலவே இந்தப் படத்திலும், எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற வகையில் மாரி செல்வராஜ் கதையை அமைத்திருந்தார்.
இந்தப் படத்திற்கு அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பாராட்டு தெரிவித்து இருந்தனர். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய மாமன்னன் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை நெட்டிசன்கள் சிலர் வடிவேலு மற்றும் உதயநிதியை பாராட்டுவதை விட இந்த இடத்தில் ஜாதி வெறி பிடித்த ஒரு கதாபாத்திரமாக நடித்த பஹத் ஃபாசிலின் கதாபாத்திரத்தை ஒரு ஹீரோ போல கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக பஹத் ஃபாசில் கெத்தாக நடித்த சீன்களை எல்லாம் கட் செய்து, அதற்கு எண்ணற்ற ஜாதி பாடல்களை போட்டு சமூக வலைதளத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் படம் குறித்து திரைப்பட விமர்சகர் ரமேஷ் பாலா படம் வெளியான சமயத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து இருந்தார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் ‘மாமன்னன் திரைப்படத்தில் பஹத் ஃபாஸிலின் நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது. ஆனால், சில ஜாதி பெருமை கொண்ட இளைஞர்களுக்கு அவருடைய நடிப்பும் கதாபாத்திரமும் வேறு விதமான தூண்டுதலாக அமைந்துவிடும் என்று கவலையாக இருக்கிறது’ என்று பதிவிட்டு இருந்தார். இவரின் கவலையான பதிவை பகிர்ந்துள்ள திரைப்பட விமர்சகர் பிரசாந்த் ”நீங்கள் சரியாக கணித்து இருக்கிறீர்கள் அண்ணா. அதே விஷயம் தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.’ என்று பதிவிட்டுள்ளார்.