மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. அவருடன் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இத்திரைப்படம் வருகிற ஜூன் 29-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். ‘மாமன்னன்’ படத்தின் ரிலீஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘மாமன்னன்’ திரைப்படத்திற்கு தடைகோரி தயாரிப்பாளர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதயநிதி நடிப்பில் உருவாகி வந்த ‘ஏஞ்சல்’ படத்தின் தயாரிப்பாளரான ராம சரவணன் தான் ‘மாமன்னன்’ படத்திற்கு தடைவிதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி, கயல் ஆனந்தி நடிப்பில் ‘ஏஞ்சல்’ என்கிற திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்து கடந்த 2018-ம் ஆண்டு அப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியதாகவும், அதன் படப்பிடிப்பு 80 சதவீதம் எடுத்து முடிக்கப்பட்டு, இன்னும் 20 சதவீதமே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்தை நிறைவு செய்யாமல் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து முடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் அதுவே தனது கடைசி படம் எனவும் அறிவித்துள்ளார்.
ஒப்பந்தப்படி இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தரமால் உதயநிதி ஸ்டாலின் புறக்கணித்து வருவதாகவும், அவர் எஞ்சிய படப்பிடிப்பை முடித்து தர வேண்டும், அதோடு ரூ.25 கோடி இழப்பீடும் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் தயாரிப்பாளர் ராம சரவணன் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கின் காரணமாக ‘மாமன்னன்’ படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.