அமெரிக்க தேர்தல் முடிவுகள்: டொனால்டு டிரம்ப் வெற்றி.... இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 பேர் வெற்றி...

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் வெற்றிக்கு 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தற்போது 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்

வெற்றி உறுதியான நிலையில் புளோரிடாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசியுள்ளார். மேடைக்கு தனது மகன், மகள், மருமகன், மருமகள் ஆகியோருடன் வந்த டிரம்ப்க்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது, அமெரிக்க வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி இதுவாகும். புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி பெற்றுள்ளோம். எனது ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும். அமெரிக்கா இனி குணமாகும்.

அமெரிக்காவின் எல்லைப் பிரச்சினைகள் சரிசெய்யப்படும். என்னை தேர்வு செய்த அமெரிக்க மக்களுக்கு பெருமை சேர்ப்பேன். அமெரிக்கர்கள் ஒவ்வொருவரின் கனவும் மெய்ப்படும். எனது அழகான மனைவி மெலானியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர் எனது வெற்றிக்காக கடுமையாக உழைத்தார் என்று பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் எலான் மஸ்க்கும் கலந்துகொண்டார்.எலான் மஸ்க்கை குறிப்பிட்டு,  ஒரு நட்சத்திரம் உதயமாகிவிட்டதாக டிரம்ப் தனது உரையின்போது நெகிழ்ந்தார்.

இந்நிலையில் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆறு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம், விர்ஜினியா, கிழக்கு கடற்கரையில் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தற்போது விர்ஜீனியா மாகாண செனட்டராக பதவி வகித்து வரும் அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் மைக் கிளான்சியை தோற்கடித்துள்ளார்.

இதே போல், ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக பதவி வகித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிலா ஜெயபால் மற்றும் அமி பேரா ஆகிய 5 பேரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தங்கள் பதவியை தக்கவைத்துக் கொண்டனர்.