கிராம நத்தம் நிலம்.. நத்தம் பட்டா... பெயர், ஆவணங்கள் மாற்றம்? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

தமிழகத்தில் நத்தம் பட்டா உரிமைதாரர்களின் பெயருக்கு பதிலாக அரசு நிலம் என பதிவேற்றம் செய்திருப்பதை உடனடியாக திருத்தம் செய்ய உத்தரவிட கோரிய வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை செயலருக்கு ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வெங்கட்ரமணா, உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் உள்ளதாவது:

“தமிழக அரசு அனைத்து ஆவணங்களையும் கணினிமயமாக்கும் திட்டத்தை மேற்கொண்டது. இதில் நகரங்களிலுள்ள சர்வே எண்களும் அடக்கம். தென்காசி நகராட்சியிலுள்ள நத்தம் சர்வே எண்களின் உரிமையாளர்கள் பெயர்களை, தேசிய தகவல் மையம் – என்.ஐ.சி., பணியாளர்கள் தவறுதலாக நீக்கியுள்ளனர். அந்த நிலத்தை அரசு நிலம் என பதிவு செய்துள்ளனர்.

இதன் காரணமாக நத்தம் நில உரிமையாளர்களின் பெயருக்கு பதிலாக அரசு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தோம். ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
தென்காசி நகராட்சி பதிவேடுகளில் அசல் நில உரிமையாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. தவறை சரி செய்யாததால் காலி இடங்களை யாரும் விற்க முடியாது. பதிவு செய்ய முடியாது. கணினி பிழையால் எந்த ஒரு குடிமகனின் நிலத்தையும் அரசால் கையகப்படுத்தவும் முடியாது. இதனால் தென்காசியில் 20,000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுபோல் கடையநல்லுார், செங்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட இதர நகராட்சிகளில் கணினி பிழை உள்ளது.

தென்காசி உள்ளிட்ட இதர நகராட்சிகளில் நத்தம் வகைப்பாடு நிலத்தின் உரிமையாளர்கள் பெயர்களில் உள்ள சர்வே எண்களை தவறுதலாக அரசு நிலம் என கணினியில் பதிவேற்றம் செய்ததை சரி செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.. தமிழகத்தில் நத்தம் பட்டா உரிமைதாரர்களின் பெயருக்கு பதிலாக அரசு நிலம் என பதிவேற்றம் செய்திருப்பதை உடனடியாக திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனுவானது நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது. தமிழக நில நிர்வாக கமிஷனர், சர்வேத்துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி ஆக., 27ல் பதில் மனு தாக்கல் செய்ய அமர்வு உத்தரவிட்டிருக்கிறது. நகராட்சிகளிலுள்ள நத்தம் நிலத்தை, அரசு நிலமாக கணினியில் தவறுதலாக பதிவேற்றம் செய்ததை சரி செய்ய நடவடிக்கை கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் மனு குறித்த எதிர்பார்ப்பு எகிறிவருகிறது.

இதனிடையே, கிராம நத்தம் நிலங்களின் பட்டா விபரங்கள், தமிழ் நிலம் தகவல் தொகுப்பில் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், அந்த விபரங்களும், ஆன்லைன் முறைக்கு சமீபத்தில் மாற்றப்பட்டது நினைவிருக்கலாம். அரசின் அறிவிப்பை தொடர்ந்து, இப்போது நத்தம் பட்டா விபரங்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதனால், அடுத்த சில மாதங்களில் நத்தம் நிலங்களை வாங்கும் மக்கள், அது தொடர்பான பட்டா மாறுதல் பணிகளை, இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாம் என்று நம்பப்படுகிறது. 

தமிழ் நிலம் தொகுப்பில், இந்த விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதை அரசு துறை அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த முடியும். விரைவில், பொதுமக்களும் பார்க்க அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது. இதன்மூலம் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள், ஆன்லைன் முறைக்கு மாற்றப்படும் நிலையில், மோசடிகள் கட்டுப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.