‘சின்னக் கலைவாணர்’ என்றும்,’ஜனங்களின் கலைஞன்’ என்றும் அழைக்கப்பட்ட மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நினைவாக,’பீ ஹேப்பி’ என்ற பெயரில் வனப் பூங்கா ஒன்று கோயம்புத்தூரில் அமையவிருக்கிறது.
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக,கோயம்புத்தூர் பச்சாபாளையத்தில், ‘சிறுதுளி’ என்ற அமைப்பு சார்பில், எஸ்.பி.பி. வனம் உருவாக்கப்பட்டது. இந்த வனத்தை ஏற்கனவே, நடிகர் விவேக் துவக்கி வைத்திருந்தார்.
இந்நிலையில், விவேக் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அவரது நினைவாக ‘பீ ஹேப்பி’ என்ற பெயரில், ஒரு ஏக்கரில் மேலும் ஒரு வனப்பூங்காவை அமைக்க,’சிறுதுளி’ அமைப்பு திட்டமிட்டுள்ளது. ’சிறுதுளி’ அமைப்பின் 19ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, விவேக் நினைவாக அமைக்கப்பட உள்ள இந்த வனத்துக்கு, கோயம்புத்தூர் பச்சாபாளையத்தில் அண்மையில் பூமி பூஜை நடைபெற்றது.
இதுகுறித்து ‘சிறுதுளி’ அமைப்பின் நிர்வாகிகளிடம் கேட்டதற்கு…
“நடிகர் விவேக் இயற்கையை பெரிதும் நேசித்தவர்.. ஏராளமான மரங்களை வளர்த்து, மக்களிடம் சுற்றுச்சூழல் ஆர்வத்தை விதைத்தவர்.. சிறுதுளி அமைப்புடன் இணைந்து பல்வேறு பணிகளை அவர் செய்துள்ளார்.. அவரின் நினைவாக ஒரு ஏக்கரில், ’பி ஹேப்பி’ வனம் என்ற பூங்கா அமைக்கப்படுகிறது.. இந்தப் பூங்கா வெகுவிரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்…” என்றனர்.
நடிகர் விவேக் பேசிய சினிமா வசனங்களில், ‘பீ ஹேப்பி’ என்ற வார்த்தை தமிழ்த் திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இதை வைத்து ‘மீம்ஸ்’களும் அவ்வப்போது வெளிவருவதுண்டு. அந்த வார்த்தையை மையப்படுத்தியே வனம் அமைய உள்ளது குறிப்பிடத் தக்கது.