சனி பகவானை வழிபடும் முறை மற்றும் உகந்தது என்ன?

சனி பகவானை வழிபடும் முறை, சனி பார்வை எத்தனை ஆண்டு காலம் இருக்கும்.? உகந்தது என்ன.? அவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்..!

சனி பகவானை எவ்வாறு வழிபடுவது, சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக சனி கருதப்படுகிறார். மகேசன், சூரியபுத்திரன், நொண்டி, முடவன், ஜடாதரா, ஆயுள்காரகன் என பல பெயர்களால் அழைக்கப்படும் சனி சூரியனின் மகன் ஆவார்.

பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனி ஆவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது.

சனியின்..
ஆட்சி வீடு – மகரம்
உச்ச வீடு – கும்பம்
நீச வீடு – துலாம்
பகை வீடு – மேஷம்
மோட்ச வீடு – சிம்மம்
சனிக்கு நட்பு கிரகங்கள் – புதன், சுக்கிரன், ராகு, கேது
சம கிரகங்கள் – குரு
பகை கிரகம் – சூரியன், சந்திரன், செவ்வாய்.
பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு சனி அதிபதி.
சனி திசை 19 வருடங்களாகும்.
சனி ஆண் கிரகமும் அல்லாமல் பெண் கிரகமும் இல்லாமல் அலியாக இருக்கிறார்.
சனியின் வாகனம் – காக்கை, எருமை,
மொழி – அந்நியபாஷை
உலோகம் – இரும்பு
வஸ்திரம் – கருப்பு பூ போன்றது
நிறம் – கருமை
திசை – மேற்கு
தேவதை – யமன், சாஸ்தா
தானியம் – எள்ளு
புஷ்பம் – கருங்குவளை
சுவை – கசப்பு

சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர். சனிதோஷம் நீங்க சனிக்கிழமைதோறும் விரதமிருந்து சனி பகவான் சன்னதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றி தீபம் வைத்து, எண்ணெய் நெய்வேத்தியம் படைத்து மனமுருக சனி கவசம் அஷ்டோத்திரம் பாராயணம் செய்து விடுவது நல்லது.
முடிந்தவரை ஏழைகளுக்கு கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் கொடுங்கள். சனி பகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது. பக்கவாட்டில் நின்று தான் வணங்க வேண்டும். இவ்வழிபாட்டை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி, வழிபட்டு வந்தால் மிகச் சிறந்த பலன்களை தரும்.

திருநள்ளாறு அம்பாளையும், சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும். காக்கைக்கு தினந்தோறும் அன்னம், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வருவதும், சனிக்கிழமை அதிகாலை வேளைகளில் சுந்தரகாண்ட பாராயணம் செய்வதும் ஏழரை சனியின் தோஷம் குறைக்கும்.

சனி தோஷத்தினால் துன்பங்கள் அதிகமாகும் நேரங்களில் கருப்பு தோல் அகற்றாத முழு உளுந்து தானியத்தை 108 என்ற எண்ணிக்கையில் இரவில் தலையணை அடியில் வைத்து உறங்கி பின்னர், காலையில் எழுந்து நீராடி சனி பகவானை 108 முறை வலம் வந்து ஒவ்வொரு வலம் முடிந்தவுடனும் ஒரு உளுந்தை தரையில் இடவேண்டும். உளுந்து தானிய தானம் அளிக்க சனிபகவான் நல்லாசி கிடைத்திட அருளும்.