மார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதிகாலை குளிர், வீடுகளின் முன் பெண்கள் இடும் வண்ணக் கோலங்கள், கோவில்களில் வழிபாடுகள் போன்றவைதான்.
இந்த சமயத்தில் பொதுவாக பெண்கள் செய்யும் வேலையினை ஆண்களும், ஆண்களாற்றும் பணிகளைப் பெண்களும் செய்கிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாடல்களைப் பாடிக்கொண்டு நகர்வலம் வருவது பெண்களே. ஆனால் இம்மாதத்தில் ஆண்கள்தான் அதிகாலையில் பஜனை மேற்கொண்டு வீதிவலம் வருகிறார்கள். ஆண் தன்மை நிலத்தோடு சம்பந்தமுள்ளதாகவும், பெண் தன்மையானது ஒரு பொருளின் வர்ணம் மற்றும் வெளிப்புற வடிவத்தின் மீதுதான் ஈர்ப்புடையதாகவும் இருக்கும். ஆனால் மார்கழியிலோ, பெண்கள் வீட்டு வாசலில் தரைமீது தான் வண்ண வண்ணக் கோலமிடுகிறார்கள்.
மார்கழி மாதம் என்பது வானுலகில் தேவர்கள் துயில் எழும் மாதம் என்பார்கள். இந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து ஆலய வழிபாடு செய்ய வேண்டும் என்பது எல்லாம் நமக்கு தெரிஞ்ச விஷயம் தான். இப்படி புனிதமான மாதத்தில், ஏன் திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்?
மார்கழி மாதத்தில் தான் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என இறைவனை அடையும் விழாக்கல் அனுசரிக்கப்படுகின்றன. மார்கழி மாதம் என்பதை ‘பீடை மாதம்’ என்று ஒதுக்கி வைத்து கொண்டிருக்கிறோம். உண்மையில் மார்கழி மாதம் ‘பீடை மாதம்’ கிடையாது. பீடு உடைய மாதம் என்பதையே திரித்து பீடை மாதம் என்கிறோம். பீடு என்றால் பெருமை உடைய மாதம். அதனால் தான் கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழி என்கிறார்.
சிறப்புடைய இந்த மாதத்தில் இறை சிந்தனை மேலோங்க வேண்டும். கிராமங்களில் இந்த மாதத்தில் விதை விதைக்கக் கூடாது என்ற சொலவடை உண்டு. இந்த மாதத்தில் விதைத்தால், விதை சரியான உயிர் தன்மையற்று வளராமல் போய் விடும். அதே காரணத்தால் தான் மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது என்று நம் முன்னோர்கள் வகுத்து சொல்லி வைத்தனர். குலம் தழைக்க வேண்டும் என்கிற அக்கறையும், நம் சந்ததி சந்தோஷமாக வாழ வேண்டும் என்கிற அன்பும் தான் காரணம்.
ஆடி மாதம் அம்பிகைக்குரிய மாதம். அதே போல, மார்கழி மாதம் இறைவனுக்குரிய மாதம். இந்த மாதங்களில் இறை சிந்தனையை தவிர வேறு சிந்தனை கூடாது என்பதாலும் திருமணம் செய்யப்படுவதில்லை. மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்து வெளியில் வரும் போது, அந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் காற்றில் ஓசோன் அதிகமாக இருக்கும். இயற்கையாகக் கிடைக்கக் கூடிய இந்த அதீத ஆக்ஸிஜன் உடலுக்கு முழுவதும் தேவையான நலனை தந்து விடும். இதனால் தான் மார்கழி மாதம் அதிகாலை, சூரிய உதயத்திற்கு முன்பாக குளித்துவிட வேண்டும் என சொல்லப்படுகின்றது.