சிசிடிவி கேமராக்களின் தொழில்நுட்ப தரத்தை உயர்த்த சைபர் ஹேக்கத்தான் போட்டி

சென்னை : காவல் துறையின் 3வது கண்ணான சிசிடிவி கேமராக்களின் தரத்தினை மேம்படுத்தி, அதை குற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால், இதற்காக மாணவர்களுடன் கைகோர்த்துள்ளார்.

அதன்படி, சென்னை பெருநகர காவல் துறையின், மத்திய குற்றப்பிரிவு, சைபர் க்ரைம் பிரிவினரால் சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளைக் கொண்டு விவரங்கள் சேகரிப்பது, அடையாளங்கள் காண்பது உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பகுப்பாய்வு செய்வது தொடர்பாக 8 தலைப்புகளில் “சைபர் ஹேக்கத்தான்” என்ற போட்டி மாணவர்களுக்காக கடந்த 6ந் தேதி இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டது.

பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து 302 குழுவினர் ‘சைபர் ஹேக்கத்தான்’ போட்டியில் கலந்து கொண்டனர். இந்தியா முழுவதிலுமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டவர்களிடமிருந்து ப்ராஜக்ட் சுருக்கம் பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

பெறப்பட்ட 300க்கும் மேற்பட்ட திட்ட வரைவுகளை ஆராய்ந்த சைபர் க்ரைம் போலீஸார், அதிலிருந்து 36 குழுவினரை இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுத்தனர். இவர்களுக்கான அடுத்தகட்ட தேர்வுகள் இன்று (26ந் தேதி) அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த 36 குழுவினர்களில் இருந்து சிறந்த குழுவினரை தேர்ந்தெடுக்க கல்லூரிப் பேராசிரியர்கள், சைபர் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய 6 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 குழுவினருக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வழங்குவதோடு, தேர்ந்தெடுக்கப்படும் குழுவினர்களில் முதல் இடத்தை பிடிக்கும் குழுவினருக்கு ரூ.50,000, 2வது இடம் பிடிக்கும் குழுவினருக்கு ரூ.30,000, 3வது இடம் பிடிக்கும் குழுவினருக்கு ரூ.20,000 என வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.